தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 hours ago 2

சென்னை,

தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேசியதாவது;

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களால்தான் நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். இது நான் நினைத்துப்பார்க்காத இடம். 2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். விரிசல் வராது. விரிசல் வருமென எதிர்பார்ப்புகள் இருக்கலாம். உங்கள் எண்ணத்தில் மண் விழுமே தவிற விரிசல் வராது. நம்முடைய ஒற்றுமைதான் தமிழகத்தை, சமூக நீதியை, காப்பாற்றி இருக்கிறது.

மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். இதனை பாஜகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். கல்விக்கான நிதியை கூட மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது. மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது.

பிரதமரே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும். பிற மொழியை நாங்கள் தொழில்நுட்பங்கள் மூலம்  கற்றுக்கொள்கிறோம். உங்களால் இந்தி மொழியை திணிக்க முடியாது. நம்மை அடக்குவதற்காக தொகுதி மறுசீரமைப்பை கொண்டுவந்துள்ளனர். அடக்க நினைப்பவர்களை அடங்கிப்போக வைப்பவர்கள் நாங்கள்.

தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் இதனால் பாதிக்கப்பட வேண்டும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள்.

இது தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். சில கட்சிகள் இதில் கலந்துகொள்ள மறுத்துள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article