
சென்னை,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அதில் தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க தென் மாநில கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:-
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்;
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2:-
மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்;
தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் மாண்புமிகு முதல்-அமைச்சருக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3:-
தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சினை. பல மாநிலங்களின் பிரச்சினை. எனவே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும், திமுக எம்.பி.க்கள் ஒருங்கிணைத்து, டெல்லியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் உடனடியாக தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி கருத்துக்களைப் பெற்று செயல்பட வேண்டும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும் கடிதம் எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பாக மற்ற மாநிலங்களுக்கு அமைச்சர்கள் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு டி.ஆர்.பி. ராஜா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.