தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசு: இன்றுக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை

3 weeks ago 4

சென்னை தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடை திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த 9ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலை கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, 11ம் தேதி (நேற்று முன்தினம்) வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசு: இன்றுக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article