சென்னை : தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பான செய்தியில், “தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார். பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75 சதவிகிதம் வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். அத்தோடு பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களும், தொழில்முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இம்மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை படிப்படியாக தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!! appeared first on Dinakaran.