மதுராந்தகம்: மார்ச் 12 முதல் தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவிப்பின்படி முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் பதிவரை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்த மாநில மையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக நாளை(12ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தல் மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் 4ம் தேதி அனைத்து ஊராட்சி செயலாளர்களும் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்துறை முறையீடு செய்வது எனவும், மூன்றாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் 21ம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையத்தின் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும், என சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி செயலர்கள் சார்பாக 12ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கம் போராட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.