
சென்னை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் 'பெத்தி' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். 'களவாணி' திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பெண்களை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாக உள்ளது. தற்போது அதற்கான பிரீ புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.