தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு: கலெக்டர் இளம்பகவத் பேச்சு

1 day ago 5

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (3.6.2025) மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று 2024-25-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆர்வமுடன் பயின்று தேர்ச்சி பெற்ற தாய் அல்லது தந்தை மற்றும் இருவரையும் இழந்து, உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் இருந்துவரும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:

கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக்கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து ஆர்வமுடன் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இந்த காலகட்டம்தான் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய காலகட்டமாகும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சரியான பாதையினை தேர்ந்தெடுத்து, படிக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான கல்வி எங்கு கிடைக்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். நீங்களெல்லாம் ஆகச்சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்கள். ஆகையால் அரசு கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ. போன்றவற்றில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். அதுமட்டும்மல்லாமல், ஒரு சில மாணவர்கள் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியாக உள்ளீர்கள். எனவே, அந்த மாணவர்கள் எல்லாம் தவறாது விருப்பமுள்ள தொழிற்கல்விப் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலமாக குறைந்தது 5 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக தொழிற்கல்விப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய அதாவது பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது.

அதுமட்டும்மல்லாமல், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகையை மாணவர்கள் கல்வி சார்ந்த செலவினங்களுக்கு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் உறவினர் மற்றும் பாதுகாவலர்கள் ஒவ்வொருவரும் மாணவ, மாணவிகளுக்கு இந்தநேரத்தில் உறுதுணையாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும்.

உங்களுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டும், ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமுயிற்சி எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே ஒவ்வொரு மாணவர்களும் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து, உயர்கல்வியில் நன்கு பயின்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் தேர்வு, உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட உயர்கல்வி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்திலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ- மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் உறவினர் மற்றும் பாதுகாவலர்கள் கலந்துகொண்டனர். 

Read Entire Article