
சென்னை,
'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை இந்தி, மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆடியோ லாஞ்சில் சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியானது. வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு தமிழில் பாடல் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ரசிகர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாடகி சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டியில் ராதாரவிக்கும், தனக்கும் என்ன பிரச்சினை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அதில் பேசிய சின்மயி, "என்னை 90 ரூபாயோ, 120 ரூபாயோ சந்தா கட்டவில்லை என்ற காரணத்திற்காக தடை செய்வதாக தடை விதித்தனர். சந்தா கட்ட வேண்டும் என்று பார்த்தால் சங்க விதிப்படி 5 ஆயிரம் கட்டினால் நான் வாழ்நாள் உறுப்பினர். சேர்வதற்கான கட்டணம் அதைவிட மிகக்குறைவு. 1000 ரூபாயோ அல்லது 2 ஆயிரம் ரூபாயோ இருக்கும்.
'சில்லுனு ஒரு காதல்' படத்தில் எனக்கு சம்பளம் 15 ஆயிரம். அந்த சம்பளத்தையும் சங்கமே எடுத்துக்கொண்டனர். அந்த ரசீது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சங்கவிதியில் கட்டணத் தொகை இருக்காது. அன்றைய தேதியில் அவருக்கு என்ன தொகை தோன்றுகிறதோ? அதை வாங்குவார். வாழ்நாள் உறுப்பினர் கட்டணமே 5 ஆயிரம்தான். ஆனால், இன்றைய தேதிக்கு இரண்டரை, மூன்றரை லட்சம் வாங்குகிறார்கள். ஒவ்வொருத்தவருக்கும் ஒரு தொகை. இதை எல்லாம் கேள்வி கேட்டால் தடை விதித்து விடுவார்கள்.
என்னை தடை செய்ததற்கு உண்மையான காரணம் மீ டூ இயக்கத்தில் நான் பேசியது. இரண்டு பெண்கள் ராதாரவியையே குற்றம் சாட்டியிருந்தனர். அந்த டுவீட்டை நான் பகிர்ந்தேன். இதை நான் சொல்லும்போதே என்னை சங்கத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். இனிமேல் எனது திரை வாழ்க்கை கேள்விக்குறி என்று தெரியும். சொல்லி வைத்தால்போல் ஒரு வாரத்தில் தடை விதித்தனர்.
ராதாரவி இந்த சங்கத்தில் இருந்து மற்ற சங்கத்திற்கு அழைப்பு விடுத்தும் அழுத்தம் கொடுத்தது போலவும் எனக்கு தகவல் வந்தது. இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இருந்தும் எடுத்துவிடுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் கேள்விபட்டேன். அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு நான் வழக்குப்பதிவு செய்தேன்.
சின்மயி தமிழில் பாட முடியாது என்ற உத்தரவு எனக்கு கடிதம் வாயிலாக வந்தது. ஒழுங்கு நடவடிக்கைனு சங்க நீக்கம் பண்ணாங்கனு சொன்னாங்க. அவருகிட்ட மன்னிப்பு கேட்கனும்னா அவரு கால்ல விழனும்னு நிறைய இருக்கு. என்னால அது முடியாதுனு சொல்லிட்டேன்.ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட கேட்டாங்க, மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேந்துக்கோனு சொன்னாங்க. நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? முடியாதுனு சொல்லிட்டேன்" என்று கூறியுள்ளார்.