இது நடந்தால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் - மைக்கேல் கிளார்க்

10 hours ago 4

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துகிறார். மேலும், இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். நல்ல பிட்னஸ் கொண்டிருப்பதால் விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், இங்கிலாந்தில் 5 - 0 (5) என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தால் விராட் கோலி ஓய்விலிருந்து மீண்டு வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒருவேளை இங்கிலாந்து தொடரில் இந்தியா 5 - 0 என்ற கணக்கில் தோல்வி கண்டால் ரசிகர்கள் விராட் கோலி ஓய்விலிருந்து மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புவார்கள். இங்கிலாந்தில் படுதோல்வியை சந்தித்த பின் கேப்டன், பயிற்சியாளர், ரசிகர்கள் கேட்கும் பட்சத்தில் விராட் கோலி மீண்டும் வருவார் என்று நினைக்கிறேன். இப்போதும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆர்வம் பற்றி அவரது வார்த்தைகளில் கேட்க முடியும். இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சமாக கருதும் அவர் அதில் விளையாடப் போதுமானவராக இருக்கிறார். அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற்று தான் வேண்டும். ஆனால் இந்தியா 5 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்தில் தோற்றால் அவர் மீண்டும் விளையாட வாய்ப்பிருக்கிறது

இருப்பினும் இந்தியா அந்தளவுக்கு மோசமாக தோற்கும் என்று நான் நினைக்கவில்லை. விராட், ரோகித் இல்லாமலேயே தற்போதைய இந்திய அணி நன்றாக இருக்கிறது. இந்தியா உணர்ச்சி வசப்படக்கூடிய நாடு. அவர்கள் இங்கிலாந்தில் வெற்றி பெற விரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article