
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற "தமிழ் வார விழா" நிறைவு விழாவில், 5 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கு நூலுரிமைத் தொகை மற்றும் பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் .
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!
எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை! தமிழ்நாடெங்கும் நடைபெற்ற தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே…
பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்.இது போதுமா?
நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்.
தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக.தமிழர் வெல்க. என தெரிவித்துள்ளார் .