இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஏப்.1-ம் தேதியன்று தமிழகத்தின் மொத்த மின்நிறுவு திறன் 32,595 மெகாவாட் என்பது தற்போது 39,770 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் அதிகபட்ச மின்நுகர்வு 2024-25-ல் 20,830 மெகாவாட்டாக உள்ளது. அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கப்படும்.