சென்னை: தமிழகத்தில் மின்சார ஆட்டோ, டாக்ஸிகளுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று மற்றும் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், தற்போதைய சூழல் மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தூய்மையான மற்றும் நிலைத்த நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின் வாகனக் கொள்கையை வெளியிட்டது. மின்வாகன உற்பத்தித் துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.