
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெறும் வகையில் திட்டங்களைத் தீட்டுவனும், நோய்த் தொற்று பரவாமல் நோய்த் தடுப்பு முறைகளை கையாள்வதும், நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதும், அதன்மூலம் ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்குவதும் மாநில அரசின் கடமை என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் இருந்தாலும், அந்த மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாத அவல நிலை நீடிக்கின்ற இந்தத் தருணத்தில், போதிய மருந்துகள் இருப்பில் இல்லாத பரிதாபகரமான சூழ்நியையில், கோள மாநிலத்தில் பாலக்காடு உட்பட மூன்று மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது என்ற செய்தி தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் தமிழ்நாட்டிற்குள் நிபா வைாஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும்.
எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.