சேலம்: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், ஓமலூரில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்படும்,’ என்றார்.
பின்னர், பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமியிடம், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என நடிகர் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, ‘அது அவருடைய கருத்து. ஒவ்வொரு கட்சி தலைவரும் கட்சி வளரவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இது போன்ற கருத்துகளை பேசுவது வழக்கம்தான் என்றார்.
ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அவர், இப்படி பேசியது குறித்து கேட்டபோது, ‘இந்த கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். என்னை கேட்டால், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு, பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்,’ என்றார்.
அதிமுக குறித்தும், அதிமுக தலைவர்கள் குறித்தும் நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய போது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், புதிதாக தொடங்கியுள்ள கட்சியினர் கூட பாராட்டும் அளவிற்கு ஆட்சி நடத்தினர். அதனால்தான், அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என்றார். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லி சென்றது குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
The post தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி appeared first on Dinakaran.