சென்னை: “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனால், இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் இது குறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. புனே ஆய்வு மையத்துக்கு, தமிழகத்திலிருந்து 17 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.