தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 12 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. ஒருசில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மீதும், அந்தமான் கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று (மே 15) முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (மே 15) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (மே 16) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.