சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திண்டிவனம் – திருவண்ணாமலை, சென்னை – மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடி நிதியை ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு தொடர்வண்டித்துறை திருப்பி அனுப்பி இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் தொடர்வண்டி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய தொடர்வண்டி பாதை திட்டங்கள், 9 இரட்டை பாதை திட்டங்கள், 3 அகலப்பாதை திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டங்களை விரைவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வரும் நிலையில்,
அதற்கு மாறாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்புவது தமிழகத்திற்கு செய்யப்படும் துரோகம். கடந்த காலத்தில் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இன்னொரு திட்டத்திற்கு செலவழிப்பது தான் வழக்கம். தமிழக நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது.
The post தமிழக ரயில்வே திட்டங்களுக்கான ரூ.728 கோடி நிதியை திருப்பி அனுப்புவதா? அன்புமணி கண்டனம் appeared first on Dinakaran.