புதுடெல்லி: இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்படுகின்றனர்.
மேலும் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல், துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நேரிடுகின்றன. இந்தநிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா, கதிர் ஆனந்த், தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோரும், கூட்டணி கட்சி எம்பிக்களான வைகோ மற்றும் துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும்,“ தீர்வு வேண்டும், தீர்வு வேண்டும், மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும், தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்” என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர்.
The post தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது appeared first on Dinakaran.