தமிழக கோயில்களில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

2 months ago 13

மதுரை: கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான செடிகள், பூந்தோட்டங்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வு எடுப்பார்கள். ஒரு சில பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரித்து பயன்பாட்டில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து முறையாக பராமரிக்க பாதுகாவலரை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், கோயில் நந்தவனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதாக கூறப்பட்டு, அதுகுறித்த புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர் தரப்பில், மறுப்பு தெரிவிக்கப்பட்டு, பராமரிக்கப்படாத சில கோயில் நந்தவனங்களின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோயில் நந்தவனங்கள் புகைப்படங்களையும், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜன. 3க்கு தள்ளி வைத்தனர்.

The post தமிழக கோயில்களில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article