
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு 'மேஜர் லீக் கிரிக்கெட்' என்ற டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இதன் 3-வது சீசன் அடுத்த வாரம் (13-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
இதனிடையே அமெரிக்க அதிபரான டிரம்ப் அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ரஷீத் கான், அஸ்மத்துலா ஓமர்சாய், நவீன் உல் ஹக், நூர் அகமது உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இருப்பினும் மேஜர் லீக் கிரிக்கெட் 'மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்' என வரையறுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.