
சென்னை,
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 12 பேருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி கோவை மண்டல இணை இயக்குநர் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "1987 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 12 ஊழியர்களுக்கு அதிகமாக நியமனம் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ண சந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் மகளிர் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்களையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும்"என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உத்தரவின் படி சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரன், நீதிமன்றம் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததாகவும், இது துரதிஷ்டவசமானது என நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்கள் அரசிடம் இல்லை என தெரிவித்ததன் மூலம், நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவிடாமல் கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தடுத்து விட்டதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு அரசின் இந்த மேல்முறையீட்டு வழக்கை ரூ. 50 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, பிடிவாதம் காரணமாகவே அபராதம் விதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "அபராத தொகையில் ரூ.25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள ரூ.25 லட்சம் ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்,"எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கு தலா ரூ.1.50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் ஊதியமாக வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் அபராத தொகையில் மீதமுள்ள ரூ.32 லட்சம் தொகையை (cancare foundation) கேன்சர் பவுண்டேஷன், நேத்ரோதயா ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.12 லட்சம் ரூபாய் வீதம் 8 வாரங்களில் வழங்க வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் உள்ள ஆவணங்கள் மாயமானதற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.