
சென்னை,
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி, ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது 'நிலவு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 21-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு 'தேரே இஷ்க் மெய்ன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கிறார். இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் டெல்லி சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் தொடங்கிய படப்பிடிப்பு பணிகள் டெல்லியில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
