விருத்தாச்சலம்: தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். தொடர்ந்து, இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகள் மூலம் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று விருத்தாச்சலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்ததை 2 தினங்களுக்கு முன்புதான் கண்டுபிடித்ததாவும் கூறினார். ஒட்டுக் கேட்கும் கருவியை யார், எதற்காக பொருத்தினர் என்பது தெரியவில்லை. லண்டனில் இருந்து வாங்கப்பட்டுள்ள விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி அது. ஒட்டுக் கேட்கும் கருவியை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று கூறினார்.
The post தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.