
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் அடுத்த மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28 வயது). இவரது மனைவி ஜாய்ஸ். இவர்களுடைய மகன்கள் ஆல்வின் ஜோ (4 வயது) மற்றும் அகஸ்டின் (1 வயது). நேற்று அகஸ்டினுக்கு தாய் ஜாய்ஸ் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு ஊட்டினார். பின்னர் குழந்தையை வெளியே விட்டு விட்டு ஜாய்ஸ் மட்டும் வீட்டின் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அகஸ்டினை காணவில்லை.
அப்போது வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த வாளியில் குழந்தை அகஸ்டின் தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாய்ஸ், உடனடியாக அகஸ்டினை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.