பூந்தமல்லி: வேலப்பன்சாவடியில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் முத்துப்பாண்டி (50) லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். லாரி கவிழ்ந்ததில் தண்ணீர் சாலையில் ஆறாய் ஓடியது. பின்னர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் டிரைவர் முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.