தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் யாரென்று போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் ( 25), சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி ( 23) என்று தெரியவந்தது. முன்னதாக இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தனர். அப்போதே அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சில மாதத்துக்கு முன்பு இருவரும் சென்னையில் வேலை செய்வதற்காக வந்தனர். பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு அரசு பஸ் மூலம் பெருங்களத்தூர், இரணியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினர். அங்கிருந்து தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு செல்வதற்காக பேசிக்கொண்டே பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி, விக்ரம் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
கவனக்குறைவால் இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து விட்டதும், அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்ததாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.