மதுரை: தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், அனுமதி மறுக்கப்பட்டது,’ என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; தேரோட்டம் நடைபெறும் நாளில் அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்பதா?. தேரோட்டம் நடக்கும் நாளில் அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக அனுமதி மீறி போராட்டம் நடத்துவேன் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல. பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. ஒரு அரசியல் கட்சி மக்களுக்காக குரல் கொடுக்க உரிமை உள்ளது.
மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மீது அடுத்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
The post தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.