தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர் சென்னை காசிமேட்டில் அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள்: அடுத்த வாரம் முதல் விலை குறைய வாய்ப்பு

6 hours ago 4

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பின. இதனால் சென்னை காசிமேட்டில் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் ரூ.900, பாறை ரூ.500, நெத்திலி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதம் என மொத்தம் 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் கடந்த 14ம் தேதி வரை வந்தது. இதனால் தமிழ்நாட்டின் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 14ம் தேதியோடு மீன்பிடி தடைகாலம் முடிந்தது. தடைகாலம் முடிந்ததையடுத்து 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும். இந்தநிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன. இதனால் காசிமேட்டில் விற்பனைக்காக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, தேங்காய் பாறை, சங்கரா, தோல் பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

ஆழ்கடலுக்கு சென்ற அதிக அளவிலான விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டு கரை திரும்பியதால் மீன் வாங்க நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. காசிமேடு மீன்கள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் அதிக அளவில் மீன்வாங்க காசிமேட்டிற்கு வந்திருந்திருந்தனர். விசைப் படகுகளில் இருந்து கூடை கூடையாக ஏல முறையில் மீன்களை விற்பனை செய்தனர். இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், விடுமுறை தினமான நேற்று காசி மேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்தாலும் மீன் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது.

சங்கரா ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரையும், சீலா ரூ.350 முதல் ரூ.400 வரையும், பாறை ரூ.400 முதல் ரூ.450 வரையும், இறால் ரூ.350 முதல் ரூ.400 வரையும், நெத்திலி ரூ.250 முதல் ரூ.300 வரையும் விற்பனையானது. இதே போல பால் சுறா-ரூ.500, நண்டு ரூ.300, நவரை ரூ.300, பண்ணா ரூ.300, காணங்கத்தை ரூ.300, கடுமா ரூ.300 என்றும் விற்பனையானது. வரும் வாரங்களில் ஆழ்கடலுக்கு சென்ற அனைத்து விசை படகுகளும் கரை திரும்ப வாய்ப்புள்ளது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் கரைக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது. அப்போது விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறினர். இதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 

The post தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர் சென்னை காசிமேட்டில் அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள்: அடுத்த வாரம் முதல் விலை குறைய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article