வல்லம், ஜன.17: தஞ்சை அடுத்த சென்னம்பட்டி அண்ணா நகர் காலனியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் நேதாஜி (29 ) . இவர் நேற்று முன்தினம் பிள்ளையார்பட்டி- திருவையாறு பைபாஸ் சாலை டாக்டர் எஸ் .ஜி. நகர் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 8-ம் நம்பர் கரம்பையை சேர்ந்த கவுதம் (28) என்பவரும் தனது பைக்கில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்குகளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இந்நிலையில் அதே நேரத்தில் எதிரே 8-ம் நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (27) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் விழுந்து கிடந்த நேதாஜி மீது மோதி ஏறி இறங்கியது.இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த நேதாஜி மற்றும் கவுதம், பாரதிராஜா ஆகியோரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி இறந்தார். கவுதம், பாரதிராஜாவுக்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post தஞ்சை அருகே விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.