தஞ்சை: தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் அருகே மானம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டெல்டா பகுதிக்கு ஒரு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடாக தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டம் கருதப்படுகிறது. அதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை, சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரை, சோழபுரம் முதல் தஞ்சை வரை என மூன்று கட்டங்களாக நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக சோழபுரம்-கும்பகோணம்-தஞ்சாவூர் பிரிவு நெடுஞ்சாலை பணி முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி 20ம் தேதி திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக சோழபுரம் முதல் சேத்தியாதோப்பு வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை பணி நிறைவடைந்தது. இதைதொடர்ந்து இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சோழபுரம்-சேத்தியாதோப்பு வரையிலான வழித்தடத்துக்கு கட்டணம் வசூலிப்பதற்காக மானம்பாடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 52 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. மானம்பாடி சுங்கச்சாவடியும் திறக்கப்பட்டால் மொத்த எண்ணிக்கை 53ஆக உயரும்.
The post தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.