தஞ்சாவூர், மே 13: மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வாரியம் அவ்வப்போது மறு சீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டுள்ளது. இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவர்.
அதன்படி தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை, கால் இயக்கக்குறைபாடுகள் உடையோர்களுக்கான மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மற்றும் புற சிந்தனையற்ற/மதி இறுக்கமுடையோர், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடு உடையோர், கற்றல் குறைபாடு உடையோர், மனநலம் பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025க்குள் விண்ணப்பித்திடுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினர் சேர்க்கை தகுதியுடையோர் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.