சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. வாரம் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,120க்கு விற்பனையானது. அது மட்டுமல்லாமல் அந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை தான் சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,155க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,240க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு appeared first on Dinakaran.