தகாத உறவால் வந்த சோதனை; பெட்ரோல் ஊற்றி கட்டிப்பிடித்ததில் பெண் சாவு; காதலன் கவலைக்கிடம்: காப்பாற்ற முயன்ற மூதாட்டியும் காயம்

5 hours ago 2

திருவொற்றியூர்: தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர், தனது கள்ளக்காதலியை கட்டிப்பிடித்துக்கொண்டார். இதில் பெண் உயிரிழந்த நிலையில், அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களை மீட்க முயன்ற மூதாட்டியும் காயம் அடைந்தார். சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அபிபுல்லா (50). இவரது மனைவி நூரிஷா (42).இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்தபோது நூரிஷாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் டெல்லிபாபு (47) என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் அபிபுல்லா அந்த வீட்டை காலி செய்துவிட்டு கடந்த 3 மாதத்துக்கு முன் எர்ணாவூர் பகுதியில் குடியேறியுள்ளார். இதன்பிறகு டில்லிபாபு, நூரிஷாவுடன் பேச பலமுறை முயற்சி செய்தபோது அது முடியாமல்போனது.

கடந்த 9ம் தேதி டில்லிபாபு, சுனாமி குடியிருப்பில் உள்ள நூரிஷாவின் வீட்டுக்கு வந்து, ‘’ஏன் என்னிடம் பேசுவதை தவிர்க்கிறாய்’’ என கேட்டபோது,’’உன்னிடம் பேச விருப்பம் இல்லை,இனிமேல் எனது வாழ்க்கையில் குறுக்கிடாதே’’ என நூரிஷா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டெல்லி பாபு, தான் பாட்டிலில் கொண்டு வைத்திருந்த பெட்ரோலை தனது உடம்பில் ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்துக் கொண்டார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த நூரிஷா கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தபோது உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் திடீரென்று நூரிஷாவை கட்டிப்பிடித்து கொண்டார்.

இதில் இருவரும் உடல் கருகி போராடியபோது அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இவர்களை காப்பாற்ற முயன்ற நூரிஷாவின் தாய் ஜெனிமா (80) என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் எண்ணுார் போலீசார் வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நூரிஷா பரிதாபமாக இறந்தார். டெல்லிபாபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.

The post தகாத உறவால் வந்த சோதனை; பெட்ரோல் ஊற்றி கட்டிப்பிடித்ததில் பெண் சாவு; காதலன் கவலைக்கிடம்: காப்பாற்ற முயன்ற மூதாட்டியும் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article