த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - விஜய் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

1 month ago 9

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமைகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு சென்னை உரிமையியல் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது என்றும் வாதிட்டார். ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய போது, தமிழக வெற்றிக் கழகம் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், த.வெ.க. கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஏப்ரல் 29 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Read Entire Article