டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோ ரூட்

7 hours ago 3

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இடம் பிடித்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி களமிறங்கினர். வழக்கமாக அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணி இந்த முறை பொறுமையாக விளையாடியது. நிதானமாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது.

இந்த இன்னிங்சின் 14 ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி அந்த ஓவரில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பென் டக்கெட் (23 ரன்கள்), ஜாக் கிராலி (18 ரன்கள்) இரண்டு பேரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆலி போப் - ஜோ ரூட் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டு வருகிறது. இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்து விளையாடும் இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அசத்தியது. இவர்களில் ஜோ ரூட் அரைசதம் முதலில் அரைசதம் அடித்தார். ரூட் - போப் ஜோடி 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. போப் 44 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் இந்த இன்னிங்சில் 46 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

Read Entire Article