காதல் மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் விரக்தி: ரெயில்வே சுரங்கப்பாதையில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை

4 hours ago 3

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 22). என்ஜினீயரான இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லாரன்ஜினா (20). இருவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு லாரன்ஜினா, கடந்த சில நாட்களுக்குமுன் சேக்காடு பகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், தீனதயாளன் நேற்று சேக்காடு சென்று தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் லாரன்ஜினா அதற்கு மறுத்ததோடு, தனது தாலியை கழற்றி கீழே வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த தீனதயாளன், மாமியார் வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தீனதயாளன், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read Entire Article