டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்

7 months ago 23

புதுடெல்லி,

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து 6வது நாளாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மக்களில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 329 ஆக பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் 'மிக மோசமான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை மூடுபனி நிலவியது.

டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில், பாவனா (426) மற்றும் முண்ட்கா (408) ஆகிய இரண்டு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 22 நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலும் மீதமுள்ள நிலையங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும் பதிவாகின.

காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம். 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 450 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது. 450 மேல் இருந்தால் கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.

Read Entire Article