
புதுடெல்லி,
டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடி வந்துள்ளார். அப்போது நேரு விகார் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர்கள், நபர் ஒருவர் அவருடைய பிளாட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றார் என கூறினர்.
அந்த பிளாட்டின் உரிமையாளரோ பூட்டின் சாவி சகோதரரிடம் உள்ளது என கூறியுள்ளார். இதனால், கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி சூட்கேசில் ஆடைகள் களையப்பட்டு, சுயநினைவற்று கிடந்துள்ளாள்.
அந்த சிறுமி கொடூர முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது, அலீனா நர்சிங் ஹோமில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அந்தரங்க பாகங்களில் தொடர்ந்து ரத்தம் வழிந்துள்ளது. உடலின் வேறு பகுதியில் காயங்கள் எதுவும் தெரியவில்லை. உடனடியாக உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டாள்.
சிறுமியின் தந்தை அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும், அந்த சிறுமி உயிரிழந்து விட்டாள் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவளுடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுபற்றி வடகிழக்கு டெல்லியின் டி.சி.பி. ஆஷிஷ் மிஷ்ரா கூறும்போது, சிறுமி பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தயாள்பூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும்படி கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான அதிஷி, இந்த சம்பவம், டெல்லி மற்றும் ஒட்டு மொத்த நாட்டுக்கும் வெட்கக்கேட்டை ஏற்படுத்தி உள்ளது என கூறினார்.
இதுபற்றி பா.ஜ.க. பதிலளிக்க வேண்டும். 4 என்ஜின் அரசு டெல்லியில் உள்ளதென்றால், பின்னர் ஏன் நம்முடைய மகள்களுக்கு பாதுகாப்பு இல்லை? என கேட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஊடகத்தில் தோன்றும் முதல்-மந்திரி ரேகா குப்தா, இந்த சம்பவத்திற்கு பின்னர் ஏன் காணவில்லை... போலீசார் கடும் நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு, விரைவான நடவடிக்கை கோரி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.