
சென்னை,
தமிழகத்தில் தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேபோல, நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுபோக, அரியலூர் மற்றும் கோவையில் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், 12,13,14 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னயை பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கே.எம்.கோயிலில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல, அரியலூர் ஆண்டிமடம், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், வேலூர் பொன்னை அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.