
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இந்தநிலையில் ஆசிரியை ஒருவரின் வீட்டில் மாணவி டியூசன் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த வீட்டில் ஆசிரியை இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆசிரியையின் கணவர் ஆரோக்கியதாஸ் (வயது 45) பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் மாணவியும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரியில் இருந்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மாணவியிடம் விசாரித்தனர். இதில் ஆரோக்கியதாஸ் தன்னிடம் தவறாக நடந்த விவரத்தை மாணவி தெரிவித்தார். அதன்பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.