சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க,போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 உதவி மேலாளர்களுக்கும், பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் 27 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒரு உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முறையே விழுப்புரத்திற்கு 2 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் 3 உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், சேலத்திற்கு 2 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், கோயம்புத்துருக்கு 2 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், கும்பகோணத்திற்கு 3 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், மதுரைக்கு 2 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும், மற்றும் திருநெல்வேலிக்கு 2 உதவி மேலாளர் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளர் (கணக்கு) பணிக்கும் என 25 உதவி மேலாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 27 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் (18 பெண் நடத்துநர்கள் உட்பட) பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.த.பிரபுசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் அவர்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யபட்ட 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.