
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தையும் சேர்த்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 392 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் ஐ.பி.எல். தொடரில் அவர் அசத்தி வருவது பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவசரப்பட்டு ஓய்வு பெற்றுவிட்டார் என்று இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த (2026) டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடுவதற்கு தகுதியுடையவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து ரெய்னா பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து அவசரப்பட்டு ஓய்வு பெற்றார் என்று நான் நினைக்கிறேன். அவர் தற்போது விளையாடி வரும் வேகத்தையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியின்போது அவர் காட்டிய வேகத்தையும் வைத்துப் பார்த்தால், அவர் இன்னும் உச்சத்தில் இருப்பது போல் தெரிகிறது. இதனால் அவர் 2026 டி20 உலக்கோப்பையில் விளையாட தகுதியானவர்" என்று கூறினார்.