
சேலம்,
9-வது டி.என்.பி.எல். தொடர் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் - கேப்டன் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி 47 ரன்கள் அடித்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 ரன்களில் (28 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரேம் குமார் 7 ரன்களிலும், சிலம்பரசன் ஒரு ரன்னிலும் ராஜேந்திரன் விவேக் 3 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து விளையாடிய கேப்டன் அபிஷேக் (47 ரன்கள்) அரைசதத்தை நெருங்கிய தருவாயில் போல்டானார். இறுதி கட்டத்தில் சன்னி சந்து ( 30 ரன்கள்), முகமது (28 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்தது. சேப்பாக் தரப்பில் 4 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பிரேம் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்க உள்ளது.