
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும்.
இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இந்திய நேரப்படி ஆட்டம் இரவு இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.