சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாகவும் குறி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சேத்தியார் தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று முருகானந்தம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது உள்ளூர் மக்களின் நலன் கருதி இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாகவும், எந்த ஒரு அசம்பாவிதமான நிகழ்வு நடைபெறாத நிலையில் புகார் கொடுக்காத நிலையில் காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் சக்தி முருகன் வாதிட்டார். அதே சமயம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையில் எந்த அனுமதியும் தராமல் போராட்டம் நடைபெற்றதாகவும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இந்த வழக்கை பதிவு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. குடியிருப்பு பகுதிகளில் இயங்கக்கூடிய மதுபான கடைகள் ஏற்படுத்தக்கூடிய சமூக பிரச்சனை குறித்து பெண்கள் நியாயமான கவலைகள் எழுப்பக்கூடிய சூழல் உள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அமைதியான போராட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் இந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது போன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கக்கூடிய ஒவ்வொரு தனிநபருக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டங்களோடு, 100கணக்கான பெண்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலையில் ஏற்படும் என்று கூறி, இந்த அமைதியான போராட்டம், வன்மையற்ற போராட்டங்களை பொறுத்தவரையில் அரசிடமிருந்து உரிமையை கேட்பதற்காக தான் நடத்தப்படுகிறது, என கூறி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் வேலுமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
The post டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.