டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் நடந்த சினிமா ஷூட்டிங்கின் போது நடிகை ஸ்ரீலீலாவிடம் அத்துமீறி நடந்து கொண்ட சிலரின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, பிரபலங்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத சம்பவங்களையும், அசவுகரியங்களையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, நடிகைகள் மற்றும் சமூகத்தில் அறியப்பட்ட பெண்கள் வெளியே செல்லும்போது சிலர் அத்துமீறி நடந்துகொள்வது அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் சிலர் எல்லை மீறி, பிரபலங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளியான நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து அவர் திரும்பியபோது, ரசிகர்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர், ஸ்ரீலீலாவைப் பிடித்து இழுத்து அநாகரிகமாக நடந்து கொண்டதால் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட படக்குழுவினர், ஸ்ரீலீலாவை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைக் கண்ட நெட்டிசன்கள் சிலர், ஸ்ரீலீலாவிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர்கள் மீது கடும் கோபத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நபர்களைப் பிரபலங்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ஸ்ரீலீலாவிடம் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட விதம் குறித்து மேலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
The post டார்ஜிலிங்கில் சினிமா ஷூட்டிங்; நடிகை ஸ்ரீலீலாவிடம் ரசிகர்கள் அத்துமீறல்: வீடியோ வைரல்; நெட்டிசன்கள் கண்டனம் appeared first on Dinakaran.