சேலம் / சென்னை: பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி, அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் பயில தகுதி பெற்றுள்ளார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியின் தந்தை 2023-ல் இறந்துவிட்டார். தாயார் கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப் பகுதியில் வசித்து வரும் மாணவி ஆ.ராஜேஸ்வரி, பழங்குடியின நலத் துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத் தேர்விற்கு தயாரானது குறிப்பிடத்தக்கது.