2 நாள் பயணமாக முதல்வர் நாளை தஞ்சை செல்கிறார்: கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்

13 hours ago 5

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறார். மறுநாள் கட்சி பிரமுகர் இல்ல மணவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், நாளை(15ம் தேதி) மற்றும் மறுநாள் 16ம் தேதி ஆகிய 2 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கல்லணைக்கு வருகிறார். அங்கு மாலை 4 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விடுகிறார்.

அதனை தொடர்ந்து மாலை தஞ்சை வரும் முதல்வர், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரம் ரோடு ஷோ செல்கிறார். பின்னர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை அவர்திறந்து வைக்கிறார். அன்றிரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் முதல்வர் தங்குகிறார்.மறுநாள் 16ம் தேதி காலை எம்எல்ஏ துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பின்னர் தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி பின்னர் முதல்வர் ஸ்டாலின் அன்று மாலை திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.முதல்வர் வருகையையொட்டி திருச்சி, தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

The post 2 நாள் பயணமாக முதல்வர் நாளை தஞ்சை செல்கிறார்: கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article