ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவு; பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?.. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் தேர்வு

4 hours ago 2

புதுடெல்லி: ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பாஜகவின் அடுத்த தேசிய தலைவரை மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
பாஜக கட்சியின் தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

பாஜகவின் சட்டவிதிகளின்படி, புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்கட்சித் தேர்தல் நிறைவடைந்திருக்க வேண்டும். தற்போது மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த உள்கட்சித் தேர்தல் பணிகளை பாஜக தலைமை வேகப்படுத்தியுள்ளது. கட்சி வட்டாரங்களின் தகவல்படி, ஜூலை 21ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, பாஜகவிற்குப் புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோடியாக, மாநிலத் தலைவர் தேர்தல்கள் தற்போது தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களுக்குள், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட 8 முதல் 10 மாநிலங்களுக்கான புதிய தலைவர்கள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, ஒன்றிய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு (மகாராஷ்டிரா), ஹர்ஷ் மல்ஹோத்ரா (உத்தரகாண்ட்), முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (மேற்குவங்கம்) ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள், புதிய தேசியத் தலைவர் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான ஏற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.

The post ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவு; பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?.. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article