பெங்களூரு: ஜெயலலிதாவின் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி தெரிவித்துள்ளார். கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தங்க, வைர நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு 6 பெட்டிகளில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அரசிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள் ஒப்படைப்பு
தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டது. 5 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகைகள், ஆவணம் குறித்து அரசு முடிவெடுக்கலாம்
அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சொத்து ஆவணங்கள், நகைகளை என்ன செய்ய வேண்டும் என அரசே முடிவெடுக்கலாம். நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கலாம்
அல்லது ஏலம் விடலாம்.
ஜெ.வின் 1.2 கிலோ தங்க ஒட்டியாணம் ஒப்படைப்பு
1.2 கிலோ மதிப்புள்ள தங்கத்தால் ஆன ஜெயலலிதாவின் ஒட்டியாணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க பேனா, கிரீடம், வாட்ச்சுகள், தட்டு ஒப்படைப்பு ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், தங்க வாட்ச்சுகள், தங்க வாள், தங்க-கைகடிகாரங்களும் மதிப்பிடப்பட்டன. 60 கிராம் எடையுள்ள தங்கப் பேனா, ஜெயலலிதாவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு மதிப்பிடப்பட்டது.
சசிகலா அபராதமாக ரூ.20 கோடி செலுத்தியுள்ளார்
சசிகலா அபராதமாக ரூ.20 கோடி செலுத்தியுள்ளார். வழக்கு செலவாக தமிழ்நாடு அரசிடம் கர்நாடகா ரூ.7 கோடி கேட்டுள்ளது என வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி தெரிவித்துள்ளார்.
The post ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு : அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி செய்தியாளர்களுக்கு பேட்டி! appeared first on Dinakaran.